Published : 08 Sep 2021 06:45 PM
Last Updated : 08 Sep 2021 06:45 PM

சென்னை மாநகராட்சியில் செப்.12-ல் 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள்: ஆணையர் அறிவிப்பு

ககன்தீப் சிங் பேடி: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 12-ம் தேதி 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (செப். 08) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தமிழக அரசு கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில், மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் இதுவரை 43,62,753 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணையாக 29,89,064 தடுப்பூசிகளும், இரண்டாம் தவணையாக 13,73,689 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே முழுமையான கோவிட் தொற்றை தடுக்க முடியும். மேலும், தீவிர நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்ற நோக்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி எதிர்வரும் 12.09.2021 அன்று தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 08) சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

'சென்னை மாநகராட்சி பகுதிகளில் 12.09.2021 அன்று 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். இம்முகாம்களில் 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒரு வார்டுக்கு ஒரு நிலையான தடுப்பூசி முகாமும், இரண்டு நடமாடும் தடுப்பூசி முகாம்களும் செயல்படும். மேலும், இது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 3,000 மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ சங்கம், கல்லூரி முதல்வர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகள், சென்னை மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கப் பேரவைகள் மூலமாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி நோய் தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x