Last Updated : 08 Sep, 2021 05:36 PM

 

Published : 08 Sep 2021 05:36 PM
Last Updated : 08 Sep 2021 05:36 PM

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்வு; இந்த மாதம் முதலே அமல்

புதுச்சேரி

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட ரூ. 500 தொகையுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையை நாளை (செப். 9) முதல் வங்கியில் பெற்றுக் கொள்ளலாம்.

புதுவை முதல்வராக ரங்கசாமி பதவியேற்றபோது முதியோர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தியும், 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் கோப்பிலும் கையெழுத்திட்டார்.

இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை கடந்த மாதம் முதல் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை வழங்கும் விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியத்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என ரங்கசாமி அறிவித்தார்.

இத்தொகை எப்போது கிடைக்கும் என்று மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கோரினர்.

இதுபற்றி அமைச்சர் தேனீ ஜெயக்குமார், "சமூகநலத்துறை சார்பில் இம்மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித்தொகை தரப்படும். 40 முதல் 65 சதவீதம் வரை ஊனம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.ஆயிரத்து 500 உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும், 66 முதல் 85 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், 86 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

இதேபோல நிரந்தர ஊனம் 60 முதல் 79 சதவீதம் வரை உள்ளவர்களுக்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்து 200ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 700 ஆகவும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு நிரந்தர ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 800 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித்தொகை இன்று வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையை நாளை (செப்.9) முதல் பயனாளிகள் தங்கள் வங்கிகணக்கில் பெறலாம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x