

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா இன்று (செப். 08) வெளியிட்ட அறிவிப்பு:
"தென்மேற்கு பருவ காற்று காரணமாக, இன்று (செப். 08) முதல் 12-ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
பந்தலூர் (நீலகிரி) 9, தேவலா (நீலகிரி) 6, அவலாஞ்சி (நீலகிரி) 5, கூடலூர் பஜார் (நீலகிரி), நடுவட்டம் தலா 4, மேல் பவனி (நீலகிரி) 2, சோலையாறு (கோவை), ஏற்காடு (சேலம்), தருமபுரி, தேக்கடி (தேனி), பெரியாறு (தேனி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்
08.09.2021, 09.08.2021: தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
10.09.2021 முதல் 12.09.2021 வரை: மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்".
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.