Published : 08 Sep 2021 10:49 AM
Last Updated : 08 Sep 2021 10:49 AM

புலவர் புலமைப்பித்தன் காலமானார்

பிரபல கவிஞரும், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.

தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் புலவர் புலமைப்பித்தன்.

சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

மரபுக்கவிதைகளில் தோய்ந்த புலமைப்பித்தன் 'குடியிருந்த கோயில்' திரைப்படத்தில் ''நான் யார நான் யார்'' பாடலின் மூலம் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்றார். பின்னர் 'அடிமைப்பெண்' படத்தில் ஆயிரம் நிலவே வா... போன்ற பாடல்களையும் எழுதி தொடர்ந்து இறவாப் புகழ் பெற்றார்.

'இதயக்கனி' திரைப்படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற மிகவும் புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே. சிரித்து வாழ வேண்டும், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட இவர் எழுதிய ஏராளமான சமூக அக்கறையுள்ள பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறையாத இடத்தைப் பெற்றுத் தந்தன.

'உன்னால் முடியும் தம்பி' படத்தில் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்று கமல்ஹாசனுக்கும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

'நாயகன்' படத்தில் இடம்பெற்றுள்ள தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே, சிவகுமாரின் 100-வது படமான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் இடம் பெற்ற உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி போன்ற உருக்கமான பாடல்களையும் எழுதியுள்ளார். வடிவேலு நடித்த 'எலி' (2015) படத்தில் தனது கடைசிப் பாடல்களை எழுதினார்.

தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததன் காரணமாக பல்வேறு அரசியல் பதவிகள் அவரைத் தேடி வந்தன. புலவர் புலமைப்பித்தன் தமிழக அரசின் முன்னாள் சட்டப்பேரவை மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார்.

சசிகலா விசாரிப்பு

புலமைப்பித்தன் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த சசிகலா, புலமைப்பித்தனின் உடல்நிலை குறித்து மருத்துவர் சஞ்சீவ் அகர்வாலிடமும், புலமைப்பித்தனின் பேரன் திலீபனிடமும் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x