Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி சட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் பயிற்சி: அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

சென்னை

காரைக்குடியில் புதிதாக அரசுசட்டக் கல்லூரி அமைக்கப்படும். அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி நமது கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி ஐந்தாண்டு மற்றும்மூன்றாண்டு சட்டப் படிப்புகளுடன் அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கப்படும். முதலாம் ஆண்டில் ஒவ்வொரு படிப்பிலும் தலா 80 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

அரசு சட்டக் கல்லூரிகளில் அதிவேக இணைய வசதியுடன் வைஃபை மண்டலம் ஏற்படுத்தப்படும்.

அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆங்கிலத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ரூ.1 கோடி செலவில் இணையவெளி, சட்டம் மற்றும் நீதி என்ற புதிய பாடப்பிரிவில் முதுகலை சட்டப்படிப்பு (எல்எல்எம்) தொடங்கப்படும். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில் ரூ.20லட்சத்தில் புதிய சட்ட ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படும்.

மயிலாடுதுறை, திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் கூடுதல் மாவட்டநீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றப்படும். அருப்புக்கோட்டையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஏற்படுத்தப்படும். காஞ்சிபுரம், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x