Published : 08 Sep 2021 03:16 AM
Last Updated : 08 Sep 2021 03:16 AM

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் ரகசிய கூட்டம்; தமிழக வனப்பகுதிகளில் போலீஸார் தீவிர சோதனை: என்ஐஏ, கியூ பிரிவினரும் விசாரணை

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் ரகசிய கூட்டம் நடத்தியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தமிழக வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருக்கிறார்களா என தமிழக போலீஸார்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் கேரள போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிசண்டை நடந்தது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு மாவோயிஸ்ட்க்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல மாவோயிஸ்ட்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வனப்பகுதிக்குள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் ரகசிய கூட்டம் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பல மாவோயிஸ்ட்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, கேரள மாநில போலீஸார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் கேரள வனப்பகுதிகளில்தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் தங்கியிருக்கும் தகவல் தமிழக கியூபிரிவு போலீஸாருக்கும் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக போலீஸார், வனத்துறையினர், கியூ பிரிவு போலீஸார், என்ஐஏஅதிகாரிகள் தமிழக வனப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி, கம்பம் மலைப்பாதைகளில் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய வாகனங்களில் மட்டும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மாவோயிஸ்ட்கள் தங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்களை பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை,தேனி, கம்பம், கோவை மாவட்டங்களில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீஸார் போடப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும், இந்த பகுதிகளில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக வனப்பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன.

கேரளா மற்றும் தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் போலீஸார் தேடுவதை அறிந்து, மாவோயிஸ்ட்கள் தமிழக வனப் பகுதிக்குள் நுழைந்து இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தேடப்படும் மாவோயிஸ்ட்களின் புகைப்படங்கள் தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் உள்ளன. அதை வைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x