

தேர்தல் நெருங்கும்போது எனது முடிவை அறிவிப்பேன் என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென்மண்டல செயலாளருமான மு.க.அழகிரி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக கூறி அவரை கடந்த ஆண்டு கட்சியிலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து, அவ்வப்போது திமுக பொருளாளர் ஸ்டாலினை விமர்சித்து வந்த அழகிரி, சமீபகாலமாக அமைதி காத்துவருகிறார்.
இந்நிலையில், மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்த அழகிரி, விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
எனது நிலைப்பாட்டையும் முடிவையும் தேர்தல் நெருங்கும் போது அறிவிப்பேன்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட உங்கள் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனரே?
எனது ஆதரவாளர்கள் யாரையும் கட்சியில் இருந்து நீக்கவில்லை. அப்படி நீக்க வேண்டும் என்றால் லட்சம் பேரை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘திமுகவில் நீங்கள் மீண்டும் இணைவீர்களா’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘‘நான் கூறுவதைத்தான் நீங்கள் எழுதுவீங்களா? நீங்களே எதையாச்சும் எழுதுறீங்க’’ என்று கோபமாக சொல்லிவிட்டு அழகிரி காரில் ஏறிச் சென்றார்.
சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்பது உண்மையான தகவல் இல்லை. அது வதந்தி’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.