

திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளுக்கு முன்பு ஒன்றரை அடி சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும் என்றும் அதற்கு மேலுள்ள சிலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட ரூ.7.60 லட்சம் மதிப்பிலான 51 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
செல்போன்களுடன் மரக்கன்றுகளையும் வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ. 40 லட்சம் மதிப்பிலான 315 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 133 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 392 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 113 பேர் ரவுடிகள்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி வீட்டிற்கு முன்பு விநாயகர் சிலைகளை வைத்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுக்குமுன் ஒன்றரை அடி சிலை வைத்து வழிபாடு செய்யலாம். அதைவிட அதிக உயரமுள்ள சிலைகளை வைக்க அனுமதியில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 315 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ. 40 லட்சமாகும்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விபரங்கள், ஏடிஎம் கார்டு விபரங்கள் கேட்டால் தயவுசெய்து கொடுக்க வேண்டாம். இணையதளம் மூலம் பொருட்களை வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும்.
நம்பகமான இணைய தளத்தை பயன்படுத்தவும். விலை மலிவாக உள்ளது என நம்பகத்தன்மை இல்லாத இணையதளத்தை பயன்படுத்த வேண்டாம். எஸ்எம்எஸ் வாயிலாக பரிசுகள் விழுந்து இருப்பதாகவும் அல்லது தகவல்கள் கேட்டாலும் ஏமாந்துவிடக்கூடாது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது கவனமுடன் கையாள வேண்டும். சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபருடன் வீடியோ கால் செய்ய வேண்டாம். உங்கள் புகாரைcybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் செய்யலாம் என்று தெரிவித்தார்.