Last Updated : 07 Sep, 2021 09:24 PM

 

Published : 07 Sep 2021 09:24 PM
Last Updated : 07 Sep 2021 09:24 PM

புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுச்சேரி

மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் சென்ற சோரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 23 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் புதுச்சேரி கரையாம்புத்தூர் அரசுப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்த வந்தது இந்நிலையில் கடந்த வாரம் குருவிநத்தத்திலுள்ள மண்டபத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் சென்று வந்த சோரியாங்குப்பம் கிராமத்தினருக்கு உடல் நிலைபாதிக்கப்பட்டது.

கடந்த இரு நாட்களில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து பாகூர் சுகாதாரநிலையத்தினர் இக்கிராமத்துக்கு இன்று சென்று கரோனா பரிசோதனை செய்தனர். அதில் இன்று பத்து பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுபற்றி சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, "சோரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தோர் மண்டபத்தில் நடந்த நிகழ்வுக்கு சென்று வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுவரை 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நலமுடன் உள்ளனர்" என்று தெரிவித்தனர்.

அரசுப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு தொற்று

கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனிடையே புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த 1ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் நிதியுதவி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கிருமாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் 3 மாணவர்கள் மற்றும் 1 பேராசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இன்று கரையாம்புத்தூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 படிக்கும் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 3 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுடன் மேலும் பலர் தொடர்பில் இருந்ததால் அவர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x