Published : 07 Sep 2021 03:52 PM
Last Updated : 07 Sep 2021 03:52 PM

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாநில மனநலக் கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் 'சீர்' என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (செப். 07) விசாரணைக்கு வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட 460 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம் மூலம் 45 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும், கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x