Published : 07 Sep 2021 11:40 AM
Last Updated : 07 Sep 2021 11:40 AM

சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு; அரசு ஊழியர்களுக்கான 13 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

அரசு ஊழியர்களுக்கான 13 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 07) முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான 13 அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது:

"அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக, அவர்களுக்கு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கும் தோழனாக என்றைக்கும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி தலைமையிலான அரசுகள் செயல்படுத்திய அரசு ஊழியர்களுக்கான நல்லத்திட்டங்கள் எண்ணற்றவை, இந்த நாட்டுக்கே வழிகாட்டுபவை. அந்த வகையில் அண்மையில் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை 110 விதியின் கீழ் வெளியிடுகிறேன்.

1. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 1.04.2022 முதல் அமல்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசுக்கு கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும், அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பே அமல்படுத்துவதால், அரசுக்கு ரூ.1,620 கோடி செலவாகும். ஆண்டொன்றுக்கு ரூ.6,480 கோடி செலவு ஏற்படும்.

2. சத்துணவு மையங்களில் செயல்படும் சத்துணவு சமையலாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோர் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம், 29,137 சமையலாளர்களும், 24,576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.

3. அரசுப் பணியாளர்கள் தங்கள் பணி காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவர்களின் பணித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, உயர்கல்வித்தகுதிக்கான ஊக்கத்தொகை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, விரைவில் அறிவிக்கப்படும்.

4. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

5. ஓய்வுபெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.

6. 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடர்பாக, தங்கள் வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்கத்தினை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனை கனிவுடன் பரிசீலித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், அவர்களின் வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்கக் காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்.

7. வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணிக்கு அமர்த்தும் வகையில், கலந்தாய்வின் போது முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்டத்தின் போது அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதுவும் சரிசெய்யப்படும்.

8. பணியிலிருக்கும்போதே காலமான அரசு பணியாளர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் அரசுப் பணியை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கும் வகையில், கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரிசெய்யும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

9. அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரை அவர்களது வயதுவரம்பினை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும், அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ், இடர்பாடுகள் ஏதுமின்றி பயன்பெற ஏதுவாக அவர்களுக்கு உதவிடும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் (help desk) ஒன்று அமைக்கப்படும்.

10. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால், கரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைகளை பொறுத்தவரையில் அரசு அலுவலர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொடர்பான ரூ. 10 லட்சம் விடவும் கூடுதலான கரோனா சிகிச்சைக்கான செலவுத்தொகை அரசு நிதியுதவியின் கீழ் அனுமதிக்கப்படும்.

11. கணக்கு மற்றும் கருவூலத்துறையின் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு, அவை துரிதமாகவும் எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய வகையில் மாவட்டம்தோறும் உரிய பயிற்சி அளிக்கப்படும்.

12. புதியதாக அரசுப்பணியில் சேரும் அரசுப்பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு தாமதமின்றி அரசு ஊழியர்கள் தங்களுக்குரிய தகுதிக்கான பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.

13. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

மக்களாட்சி தத்துவத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தில் அடித்தளமாக விளங்கக்கூடியவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு, அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றும்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x