Published : 07 Sep 2021 03:15 AM
Last Updated : 07 Sep 2021 03:15 AM

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா?- இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என,தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரம் கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட கிராமசந்தையில் இடம் ஒதுக்கி இருந்தார்கள். அதனை பயன்படுத்தி வந்தநிலையில், சிலர் அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, விளையாட்டு பயிற்சிக்கு உரிய இடம் ஒதுக்கித்தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மாநில துணைத்தலைவர் நெப்போலியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் அதிகாரி ஒருவர் சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதாகவும், அதைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் அளித்த மனுவில், “விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலம், விஜர்சனத்துக்கு தடையால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூரில் 1962-ம்ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பேத்கர் நினைவு பூங்காவில் தமிழக அரசு செலவில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

சிவபாரத இந்து மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அளித்த மனுவில், “தமிழகத்தில் சாதி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டால், அனைவரும் சமமாககருதப்படுவார்கள். வன்கொடுமைதடுப்புச் சட்டத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தனசேகரன் நகர் கிளை இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் சிறியபுஷ்பம், மாவட்டச் செயலாளர் பூமயில் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாநகராட்சி தனசேகரன் நகர் 5, 6-வது தெருவில் சாலை வசதி, வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வ.பாண்டியாபுரம் மக்கள் அளித்த மனுவில், “எங்கள் கிராமத்தில் தண்ணீர் தேவைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மோட்டார் அறை அமைத்து, மின் மோட்டாரும் பொறுத்தப்பட்டு 2 ஆண்டுகளாக மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை.

மின் இணைப்பு கொடுத்து, மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x