Last Updated : 06 Sep, 2021 07:57 PM

 

Published : 06 Sep 2021 07:57 PM
Last Updated : 06 Sep 2021 07:57 PM

முதலை கடித்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதி; வனத்துறை அதிகாரிகள் விசாரணை

கடலூர்

சிதம்பரம் பகுதியில் முதலை கடித்து 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 2 பேரிடமும் வனத்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறி விசாரணை செய்தனர்.

சிதம்பரம் அருகே கிள்ளையை அடுத்துள்ள பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதுரை மகன் ராஜீவ்காந்தி (35). விவசாயி. இன்று மதியம் இவர் அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் முகம் கழுவியுள்ளார். அப்போது வாய்க்காலில் இருந்து முதலை அவரது முகத்தைக் கடித்துள்ளது. இதனால் ராஜீவ்காந்தி அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சிதம்பரம் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தந்தனர். கடலூர் மாவட்ட வன அலுவலர் எம். செல்வம் உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா, வனப்பணியாளர்கள் புஷ்பராஷ், அமுதப்பிரியன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று வாய்க்காலில் இருந்த 4 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட குட்டி முதலையைப் பிடித்து வக்காரமாரி குளத்தில் விட்டனர்.

இதற்கிடையே குமாட்சி அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மாரியப்பன் (48). விவசாயி. இன்று மாலை இவர் கிராமத்துக்குப் பின் பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது முதலை ஒன்று அவரது வயிறு, வலது தொடையைக் கடித்துள்ளது. மாரியப்பன் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தில் இருந்து பொதுமக்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலை கடித்துச் சேர்க்கப்பட்டிருந்த பனக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோரிடம் சிதம்பரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஆறுதல் கூறி விசாரணை செய்தனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலை கடித்து சிகிச்சை பெற்று வந்த தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனிடம் வனத்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறி விசாரணை செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x