Published : 06 Sep 2021 06:53 PM
Last Updated : 06 Sep 2021 06:53 PM

புதுச்சேரியில் தனியார் நர்சிங் கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கரோனா

தனியார் நர்சிங் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. விடுமுறை நாட்களில் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 8.38 லட்சம் பேருக்கு தடுப்பூசி புதுச்சேரியில் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதுச்சேரி கிருமாம்பாக்கத்திலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 3 மாணவிகள், பேராசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு இன்று சென்று ஆய்வு செய்தனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "நர்சிங் கல்லூரியில் பேராசிரியர், 3 மாணவர்களுக்கு கரோனா உறுதியானது. கரோனா தொற்று கல்லூரியிலிருந்து வரவில்லை. விடுமுறை நாட்களின்போது அவர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்டு அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையில் உள்ளனர். கல்லூரி சென்று பரிசோதித்தோம். கல்லூரியில் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. இதனால் கல்லூரி தொடர்ந்து இயங்குகிறது" என்று குறிப்பிட்டனர்.

8.38 லட்சம்பேருக்கு தடுப்பூசி

புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 434 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 20, காரைக்காலில் 6, ஏனாமில் 1, மாஹேவில் 5 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 112, காரைக்காலில் 30, ஏனாமில் 8, மாகேவில் 25 பேர் என 175 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 448, காரைக்காலில் 170, ஏனாமில் 27, மாகேவில் 94 பேர் என 739 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 914 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 47, காரைக்காலில் 17, ஏனாமில் 2, மாகேவில் 12 பேர் என 78 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2வது தவணை உட்பட 8 லட்சத்து 38 ஆயிரத்து 485 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x