Published : 06 Sep 2021 05:33 PM
Last Updated : 06 Sep 2021 05:33 PM

பிள்ளையாருக்குத் தமிழகத்தில் இடம் இல்லையா?- தனிமனித உரிமையில் தலையிடுகிறார் முதல்வர்: அண்ணாமலை

சென்னை

பிள்ளையாருக்குத் தமிழகத்தில் இடம் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விநாயகரைப் பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர் என்றும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தொடர்ந்து பக்தர்களின் மனத்தையும் மதத்தையும் புண்படுத்தி வரும் திமுக ஆட்சியில், விநாயகர் சிலைகள் வைக்கத் தடை விதித்தும், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் ஏழைக் குயவர்களைக் கைது செய்தும், குறிப்பாக இந்துக்கள் மத்தியில் ஒரு அச்சத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தி வரும் அரசின் இந்த அராஜக நடவடிக்கைகளை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கத் தமிழைத் துங்க கணபதியிடம் இறைஞ்சிய அவ்வையின் பிள்ளையாருக்குத் தமிழகத்தில் இடம் இல்லையா?

எதை எழுதத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் தமிழரின் பழக்கத்தையும், எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டு தொடங்கும் வழக்கத்தையும் நம் தமிழர்கள் மரபுவழி கொண்டிருக்கிறார்கள். அந்த விநாயகரை வழிபடத் தடை விதிப்பது தனிமனித அத்துமீறல் இல்லையா?

பாலகங்காதர திலகர் புனேவில் 1893ஆம் ஆண்டு, பொதுவெளியில் பந்தல் போட்டு விநாயகரை வழிபடும் முறையை ஏற்படுத்தினார். சுதந்திரப் போரில் பொதுமக்களை ஒன்றுதிரட்ட, அவர் செய்த இந்த புதிய முயற்சி மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்து, விடுதலையை வென்று தந்தது. அதைத் தந்த கணபதிக்குத் தமிழகத்தில் இடம் இல்லையா?

புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எல்லாம் விநாயகர் வழிபாட்டிற்கு எந்தத் தடையும் இல்லாதபோது, இங்கு மட்டும் கட்டுப்பாடுகள் கூட விதிக்காமல், முழுமையாகத் தடை விதிக்கக் காரணம் என்ன? தமிழரின் தொன்மையான விநாயகர் வழிபாட்டை மதிக்காமல், முழுமுதற் கடவுளை மதிக்காமல், தொடர்ந்து பக்தர்களை அவமானப்படுத்தினால் மாற்று மதத்தினரின் ஓட்டுகளைச் சம்பாதிக்கலாம், ஆதரவைப் பெருக்கலாம் என்ற நோக்கத்தில் இந்த அவல முடிவு எடுக்கப்பட்டதா?

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்பவர் திருப்பாப்புலியூர் காவல் அதிகாரி மூலம் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடவுள் சிலை செய்வது சட்டப்படி குற்றமா? தமிழர்கள் தங்கள் விருப்பமான கடவுளை வழிபடுவதற்கு முதல்வரின் அனுமதி வேண்டுமா? தங்கள் இல்லத்தில் இறை வழிபாடு செய்யும் தமிழர்கள் மீது ஏன் இத்தனை வன்மம் திமுகவுக்கு?

தமிழகக் காவல்துறையினர் தங்கள் கண்ணியத்தையும் கடமையையும் மறந்து கைது, மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கி, ஆளும்கட்சியின் கூலிக்காரர்களாகச் செயல்படுவதைக் கண்டிப்பாக ஏற்க முடியாது. அதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

தமிழக மக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். பாஜகவின் சார்பில் ஒரு லட்சம் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் அகவல் பாடி வழிபட இருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வாசலில் உங்கள் கோலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து வழிபடுங்கள். வல்லப கணபதியை உங்கள் வாசலுக்கு வரச் சொல்லுங்கள். மூன்று நாட்களும் விநாயகர் அகவலைப் படியுங்கள்.

மற்ற மதத்தினரையும் உங்கள் வழிபாட்டிற்கு அழையுங்கள். மரியாதையுடன் அவர்களுக்கும் நம் மனக்காயங்களைச் சொல்லுங்கள். விநாயகர் சிலைகளை மரபுப்படி நீங்களே சென்று நீர்நிலைகளில் கரையுங்கள். ஆகம முறைப்படி நீரில் கரைக்க வேண்டிய விநாயகரை, அள்ளும் குப்பைகள் போல அரசு கரைக்க முற்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரே, தொடர்ந்து தமிழர்களை அவமானப்படுத்தி, தனிமனித உரிமையில் தலையிடுகிறீர்கள். விநாயகரைப் பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர். இதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் பிள்ளையார் உங்களுக்குப் புரிய வைப்பார்.

தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள். மாற்று மதப் பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை நாம் அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். பாஜகவின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தமிழக முதல்வருக்கு ஒரு அஞ்சல் அட்டையில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x