Published : 06 Sep 2021 03:46 PM
Last Updated : 06 Sep 2021 03:46 PM

தமிழகத்தில் இலவசமாக 'மொட்டை' மட்டும்தான் கிடைக்கும்: அரசு மீது ஜெயக்குமார் விமர்சனம்

தமிழகத்தில் இலவசமாக 'மொட்டை' மட்டும்தான் கிடைக்கும் என, அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (செப். 06) ஆலோசனை நடத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நண்பகல் 12 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

கூட்டத்துக்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், மேலும் அவகாசம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "எங்கள் ஆட்சி பயந்துகொண்டு தேர்தலைத் தள்ளிவைப்பதாக திமுக அப்போது சொன்னது. இப்போது இவர்களும் பயத்தினால்தான் தேர்தலைத் தள்ளிப்போட முயல்கின்றனரா?

தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை திமுக அளித்தது. நீட் விலக்கு, மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, முதியோருக்கு ரூ.1,500 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும், டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து என, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் அடித்துக் கொள்ளலாம். தமிழக மக்கள் முழுமையாக மொட்டை அடிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒன்று" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x