Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கோரி தமிழகத்தில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சிவகாசியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை.

சிவகாசி

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி அளிக்கக் கோரி வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய உள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக செயல் வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசினார். அதைத் தொடர்ந்து பாட்டாசு உற்பத்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். தமிழகத்தைவிட அதிகமாகக் கரோனா பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனாவை காரணம் காட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு வரைமுறை செய்து அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கட்சியினர், தலைவர்கள் வீடுகளின் வாசல்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய உள்ளோம்.

கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சிக்க வைக்க தனி மனித தாக்குதல் நடக்கிறது என்பதுதான் எங்களது கருத்து. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் தலைவர்களை வழக்கில் சேர்ப்பதை பாஜக கண்டிக்கிறது. பட்டாசுத் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். கரோனாவை காரணம் காட்டி மட்டுமே பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுபோன்ற முடிவை மேற்கொள்ளாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x