Last Updated : 06 Sep, 2021 03:16 AM

 

Published : 06 Sep 2021 03:16 AM
Last Updated : 06 Sep 2021 03:16 AM

சாலையோரங்களில் நடந்து சென்று இரும்புக் கழிவுகளை சேகரித்து வாழும் முதியவர்

மதுரை

சாலையோரங்களில் வாகன டயர்களை பஞ்சராக்கும் இரும்புத் துண்டுகளை 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் முதியவர் ஒருவர் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

உடலில் வலிமை இருந்தால் எந்த வேலையை பார்த்தும் பிழைக்கலாம் என்பதற்கு உதாரணமாக, மதுரையில் 60 வயது முதியவர் கோபால் என்பவர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் கிடக்கும் இரும்பு துண்டு, காந்த துகள்கள் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து, அவற்றை விற்று கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்துக்கிறார். மேலும், இதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தனது சகோதரரின் மகன்களின் கல்விச் செலவுக்குக் கூட உதவுவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: எனது சொந்த ஊர் கேரளா. பிழைப்புக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை கல்மேடு பகுதிக்கு வந்தோம். 2014-ல் மனைவி இறந்த நிலையில், பிள்ளைகள் கேரளாவுக்கு சென்றுவிட்டனர். தற்போது, கல்மேட்டில் தம்பியின் வீட்டில் இருக்கிறேன். மதுரைக்கு வருவதற்கு முன்பு இருந்தே கடந்த 35 ஆண்டுகளாக சாலையோரங்களில் கிடக்கும் இரும்பு கழிவுத் துண்டுகள், பழைய ஆணிகள், காந்த துகள்களை சேகரிக்கும் பணி செய்கிறேன்.

இதற்காக மரக்கட்டை ஒன்றில் காந்தங்களை பொருத்தி தரையில் உரசிச் செல்லும்போது அதில் இரும்பு துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அவற்றை சல்லடை மூலம் சலித்து இரும்பு கழிவுகளை பிரித்தெடுப்பேன். இதன்மூலம் தினமும் 30 கிலோவுக்கு மேல் இரும்புக் கழிவுகள் கிடைக்கும்.

ஒரு கிலோ ரூ.27-க்கு பழைய இரும்புக் கடையில் விற்பேன். நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பாதிப்பேன்.

இதற்காக தினமும் 50 கி.மீ.க்கு மேல் தினமும் சாலையோரங்களில் நடந்து செல்கிறேன்.

கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, சாலை யோரம் இரும்புத் துண்டுகளை சேகரித்து இருக்கிறேன்.

எனக்கு இதுதான் வாழ்வாதாரம் என்றாலும் இதன்மூலம் வாகனங் களின் டயர்களை இரும்புத் துண்டுகள் பதம் பார்ப்பதில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x