விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அரசு ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அரசு ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள்.

அரசு ஊழியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள்: விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.60.37 கோடியில் கட்டப்படுகிறது

Published on

விருதுநகரில் அரசு ஊழியர் களுக்காக ரூ.60.37 கோடியில் 222 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

விருதுநகரில் கடந்த 1985-ம் ஆண்டில் விருதுநகர்- சூலக்கரை இடையே சுமார் 300 ஏக்கரில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டப்பட்டது. தமிழக அரசின் 32 துறைகளைச் சார்ந்த அலுவலகங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் அலுவ லர்கள், ஊழியர்கள் என 1,200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள் தங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 ஏக்கரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் பல கோடி ரூபாய் செலவில் 1985-ம் ஆண்டில் 745 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 26 ஆண்டுகளுக்குப் பின் குடி யிருப்புகள் பழுதடைந்தன. பல வீடுகளில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. இதில், ஒரு பெண் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டில் இக்குடியிருப்பு குடியிருக்க தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டது. அங்கு வசித்த அரசு அலுவலர்கள், ஊழி யர்களின் குடும்பத்தினர் வெளி யேற்றப்பட்டனர்.

இந்நிலையில், விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்தது. அரசு ஊழியர்களின் பழுதடைந்த கட்டிடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் தற்போது அரசு மருத்து வக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதை ஏற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ரூ.60.37 கோடியில் 222 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு கட்டு மானப் பணிகள் தொடங்கப்பட்டன. கரோனா தொற்று மற்றும் ஊர டங்கு காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமானது. தற்போது மீண்டும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டு மானப் பணிகள் முடிக்கப்படும் என்று கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in