Last Updated : 10 Feb, 2016 02:44 PM

 

Published : 10 Feb 2016 02:44 PM
Last Updated : 10 Feb 2016 02:44 PM

25 ஆண்டுகளாக பொதுக்கழிப்பிட வசதி இல்லை: சிரமப்படும் புளியங்கண்டி கிராம மக்கள்

பொள்ளாச்சி பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் 25 ஆண்டுகளாக பொதுக் கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

பொள்ளாச்சி ஆழியாறு அருகே உள்ளது புளியங்கண்டி கிராமம். ஆழியாறு அணைக்கு அருகே அமைந்துள்ள இந்தக் கிராமத்தில், கடந்த 25 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 300-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: இந்தக் கிராமம், கோட்டூர் பேரூராட்சிக்கு உட் பட்டது. இங்குள்ள வீடுகள், 25 ஆண்டுகளுக்கு முன், வனத்துறையின் கிராம தத்தெடுப்புத் திட்டத்தில் கட்டப்பட்டது. பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் விலங்குகள் நடமாட்டம் நிறைந்த வனப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். தற்போது வீடுகள் வலுவிழந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அருகே இருந்தாலும், பேரூராட்சியின் கவனம் தங்கள் கிராமத்தின் மீது படவில்லை. வனப் பகுதிக்கு அருகே இருப்பதால், வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் காட்டப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கோட்டூர் பேரூராட்சித் தலைவர் பூங்கோதை துரைசாமி கூறும்போது, “புளியங்கண்டி பகுதிக்கு பொதுக்கழிப்பிட வசதி இல்லை என்பது உண்மைதான். இப்பகுதியில் கழிப்பிடம் கட்ட இடமில்லை. பொதுப்பணி மற்றும் வனத்துறையினரின் இடங்கள்தான் உள்ளன. அவர்களிடம் நிலம் கேட்கப்பட்டு, கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் காட்டப்படுவதில்லை. கடந்த வாரம் இப்பகுதி மக்களின் வசதிக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. பொதுக் கழிப்பிட பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x