

நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், செவிலியர் சகோதரிகளுடன் 'சத்ரியன்' திரைப்படம் பார்த்ததாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் மற்ற கட்சிகளின் தலைவர்கள் உடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்று வருகிறார். அதே நேரம், மக்கள் பிரச்சினைக்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாட்டுக்கும் சென்று வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அதன்பிறகு, சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மாதந்தோறும் அல்லது 2 வாரங்களுக்கு ஒருமுறை சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். கடந்த 25-ம் தேதி தனது பிறந்த நாளை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடினார்.
தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், உயர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தபோது எடுத்த படம்” என்று பதிவிட்டுள்ளார்.