Published : 05 Sep 2021 12:22 PM
Last Updated : 05 Sep 2021 12:22 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாவட்டங்களுக்கு வரும் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களை அதிமுக நேற்று நியமித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x