Last Updated : 04 Sep, 2021 05:45 PM

 

Published : 04 Sep 2021 05:45 PM
Last Updated : 04 Sep 2021 05:45 PM

கோவை குற்றாலம், பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாத் தலங்கள்: செப்.6-ல் திறப்பு

கோவை காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா பகுதியின் தோற்றம்.

கோவை

கோவை குற்றாலம், பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாத் தலங்கள் நாளை மறுநாள் (செப். 06) முதல் திறக்கப்படுவதாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக, கோவை காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பூச்சமரத்தூர், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோவை குற்றலாம் ஆகிய சூழல் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், அரசு வழிகாட்டுதல்படி வரும் 6-ம் தேதி முதல் அங்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறியதாவது:

"கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். இந்த விதிகளைக் கடைப்பிடித்து சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோவை குற்றாலத்துக்குச் செல்ல விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி 5-ம் தேதி முதல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு வருபவர்களை 4 குழுக்களாக தினமும் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளோம். காலை 9 மணி முதல் 9.30 மணி வரை, காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 78260 70883 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலாப் பகுதியில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் விடுதிக்கு 4 பேர் வீதம் மொத்தம் 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அவ்வாறு வருவோர் ஆன்லைனில் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94899 68481 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுல்படி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூழல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும்".

இவ்வாறு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x