Published : 04 Sep 2021 12:31 PM
Last Updated : 04 Sep 2021 12:31 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் வரும் 6-ம் தேதி ஆலோசனை

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்: கோப்புப்படம்

சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் வரும் 6-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாவட்டங்களுக்கு வரும் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் வரும் 6-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (செப். 04) அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 6-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலைக் காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், மேலும் அவகாசம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப். 03) மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x