Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM
முதல்வர் ஸ்டாலின் மீது கடந்தஅதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 16 குற்றவியல் அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பாக வரும் 17-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2021-ம்ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கி டாக்கி கொள்முதலில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். அரசுக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்கள் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கூறியதாகவும் ஸ்டாலின் மீது அப்போதைய அதிமுகஅரசு சார்பில் 16 குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பபெறப்படும் என்று தெரிவித்துள்ளது. அதற்கான அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அனுமதி அவசியம்
இதற்கிடையில், எம்.பி.,எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்ப பெறுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்க இருப்பதால், அவர்மீதான 16 அவதூறு வழக்குகளை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 16 குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்ப பெற அனுமதிப்பது தொடர்பான மனு மீது வரும் 17-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து, வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT