Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 380 சிறப்பு முகாம்கள் மூலம் 58,141 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில்,மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நாள்தோறும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாம்களில் மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று 380 சிறப்பு முகாம்கள் மூலம் சுமார் 58,141 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இந்த சிறப்பு முகாமில் 12 பொறுப்பு அலுவலர்கள், 1,091 முன்கள பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பால்வளத் துறை அமைச்சர் .சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் கூறும்போது, "திருவள்ளூர் மாவட்டத்தில் செப்.2 வரை 42.50 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) செந்தில்குமார், திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி பொறியாளர் நளினி, சுகாதார அலுவலர் ஆல்பர்ட், வட்டார மருத்துவ அலுவலர் லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், திருவள்ளூர் ராஜம்மாள் தேவி பூங்கா மற்றும் ரயில்நிலையத்தில் நடைபெற்ற கரோனாதடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்டஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜவஹர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், வட்டார மருத்துவ அலுவலர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x