

மேற்கு தாம்பரம், ராஜகோபல் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் அசோகன்(52). இவர் இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு என்ற அமைப்பின் மாநில பொறுப்பாளராக உள்ளார். இவர் தன் வீட்டில் 3 மற்றும் 4 அடி உயரமுள்ள 21 விநாயகர் சிலைகளை வைத்திருந்தார். இந்தச் சிலைகள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு வழங்க திட்டமிட்டதாகத் தெரிகிறது.
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தடை இருப்பதால், இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீஸார், வருவாய் துறையினர் உதவியுடன் அந்தச் சிலைகளை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அந்தச் சிலைகள் அங்கிருந்து எடுக்கப்பட்டு அருகில் உள்ள கன்னடப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் வைத்து சீல் வைக்கப்பட்டது.