Published : 04 Sep 2021 03:16 AM
Last Updated : 04 Sep 2021 03:16 AM

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி எழுந்தருளல்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ஆவணித் திருவிழாவில் 8-ம் நாளான நேற்று கேடயச்சப்பரத்தில் பச்சை சார்த்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்த சுவாமி சண்முகர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ஆவணித் திருவிழாவில் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி எழுந்தருளல் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் 7-ம் நாளான நேற்று முன்தினம் சுவாமி சண்முகர் சிவப்பு சார்த்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுற்றி வந்தார்.

8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, வெள்ளை சார்த்திய திருக்கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியை அடைந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பகல் 12 மணியளவில் 108 மகாதேவர் சன்னதி முன்பிருந்து சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை உடுத்தி, மரிக்கொழுந்து மற்றும் பச்சை நிற மாலை அணிந்து பச்சை சார்த்தி அலங்காரத்தில் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுற்றி வந்து இருப்பிடம் சேர்ந்தார்.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆவணித் திருவிழாவில் 10-ம் நாளில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10-ம் திருநாளான நாளை காலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மனை தனித் தனிச் சப்பரத்தில் எழுந்தருளச் செய்து கோயில் உள்பிர காரத்தில் உலா நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x