Last Updated : 03 Sep, 2021 06:56 PM

 

Published : 03 Sep 2021 06:56 PM
Last Updated : 03 Sep 2021 06:56 PM

கார் டயர் வெடித்து ராணுவ வீரர் மரணம்: விடுமுறையில் மதுரை வந்தபோது பரிதாபம்

குடும்பத்தினருடன் சீனிவாசன் | கோப்புப் படம்.

மதுரை

திருமங்கலம் அருகே கார் டயர் வெடித்து ராணுவ அதிகாரி மரணம் அடைந்தார். காஷ்மீரில் பணிபுரிந்த அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை திருமங்கலம், சோனா மீனா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (48). ராணுவ அதிகாரியான இவர், காஷ்மீர் பகுதியிலுள்ள ஸ்ரீநகரில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று அவர் மீண்டும் ஸ்ரீநகருக்குப் புறப்பட இருந்தார்.

இந்நிலையில் மனைவியின் தங்கையை விருதுநகரில் விடுவதற்காக அவரை காரில் அழைத்துச் சென்றார். ஊரில் அவரை இறக்கிவிட்டு, திருமங்கலத்துக்குத் திரும்பினார். காரை அவரே ஓட்டி வந்தார். நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை அருகே வந்தபோது, திடீரென காரின் டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார், சாலையின் தடுப்புச் சுவரைக் கடந்து எதிரே திருமங்கலம்- விருதுநகர் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. இக்கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் உயிரிழந்தார்.

மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜோதி ராமலிங்கத்திற்கு கால் முறிவு ஏற்பட்டது. அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள், காருக்குள் சிக்கிய ராணுவ அதிகாரியின் உடலை மீட்க சுமார் 30 நிமிடம் போராடினர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர். விபத்தால் விருதுநகர்- திருமங்கலம் நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உயிரிழந்த சீனிவாசனுக்கு மனைவி புவனேசுவரி, இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x