புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து; தண்ணீர் வரி ரூ.3 குறைப்பு: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து; தண்ணீர் வரி ரூ.3 குறைப்பு: முதல்வர் ரங்கசாமி
Updated on
1 min read

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து செய்யப்படுகிறது. தண்ணீர் வரி ரூ. 3 குறைக்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உணவுப்பொருள்கள் தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதில் அளித்துப் பேசியதாவது:

''இலவச மனைப் பட்டா தந்து ரத்து செய்யப்பட்டோருக்கு மீண்டும் தர நடவடிக்கை எடுக்கப்படும். எம்எல்ஏக்களுடன் கலந்து ஆலோசித்து புதிய சட்டப்பேரவை அமைக்கப்படும். தேவைப்படும் அனைத்து ஏழைகளுக்கும் இலவச மனைப் பட்டா வழங்கப்படும்.

மாநில அந்தஸ்து குறித்தான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி வீடுகளுக்கு ரத்து செய்யப்படும். வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படும்.

தெருவிளக்குகளில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் மின்துறை பாக்கியான ரூ.205 கோடியை அரசு செலுத்தும். அதனால் தேவைப்படும் இடங்களில் தெருவிளக்குகளைப் பொருத்தி, செயல்பட மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நகராட்சி, பஞ்சாயத்துகளில் தடையில்லாச் சான்று தேவையில்லை.

கோயில் நிலத்தில் வசிப்போருக்கு கிரயம் செய்து தர முடியாது. ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தப்படும். போலிப் பத்திரங்களை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்வது பற்றி சட்டத்துறையும், பதிவாளர் துறையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மூடப்பட்ட ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்படும். கோயில்களில் அறங்காவலர் உறுப்பினர்கள் எண்ணிக்கை 5-ல் இருந்து 9 ஆக உயர்த்தப்படும்.

பாப்ஸ்கோ மூலம் குறைந்த விலையில் பண்டிகை காலத்தில் நடத்தப்படும் தீபாவளி பஜார் நடப்பாண்டு முதல் செயல்படும். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்".

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in