கோடநாடு விவகாரம்; ஈபிஎஸ், சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, வி.கே.சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரிய வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, ஜெ.இளவரசி, வி.என்.சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மேல்கூடலூரைச் சேர்ந்த சுனில் ஆகிய 9 பேரை சாட்சிகளாக விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த தீபு, ஏ.சந்தோஷ்சாமி, வட்டணந்திராவைச் சேர்ந்த எம்.எஸ். சதீசன் ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தனர். அதில், இவ்வழக்கில் முன்னாள் முதல்வருக்குத் தொடர்பு இருப்பது பற்றி சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகக் கூறப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் நடைபெற்ற கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும். இவ்வழக்கில் புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணை நடத்தவில்லை. முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டுனர். எனவே, இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, வி.கே.சசிகலா உள்ளிட்டோரை சாட்சிகளாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (செப். 03) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் கூடுதலாக சிலரை எதற்காக விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாகத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக, மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். மேலும், மூவரின் வழக்கு குறித்து 3 வாரங்களில் ஷோலூர்மட்டம் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in