Published : 03 Sep 2021 05:31 PM
Last Updated : 03 Sep 2021 05:31 PM

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பத்தையும் சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

அமைச்சர் மெய்யநாதன்: கோப்புப்படம்

சென்னை

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 03) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதில், அத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

''1. ஒலிம்பிக் அகாடமிகள் மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இங்கு உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை (Techno – Economic Feasibility Report) தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2. தமிழர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை அரசு வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3. கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் சிறப்பு பழுதுபார்த்தல் பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

4. கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் கையுந்து பந்து, கூடைப்பந்து ஆடுகளங்களுக்கு கம்பி வேலி அமைக்கும் பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

5. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடைய செயல்பாடுகள் குறித்த விவரங்களை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அழைப்பு சேவை மையம் தொடங்கப்படும்.

6. 2021-22-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சுழல் நிதி ரூ.1 கோடியின் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்களில் பயோ-மெட்ரிக் மற்றும் சிசிடிவி கருவிகள் பொருத்துதல், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் உள்ள ஆணையத்தின் புதிய அலுவலகத்திற்கான அடிப்படை வசதிகள் நிறுவுதல் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளின் அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

7. கிராமப்புற மக்களின் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகமானது அதன் உறுப்புக் கல்லூரிகளின் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூலம் அருகாமையிலுள்ள கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தி கிராமப்புற பயிற்சி திட்டத்தின் கீழ் உடற்தகுதிப் பயிற்சியை மேற்கொள்ளும்.

8. யோகா மற்றும் தியானம் போன்ற பழங்காலப் பயிற்சி முறைகள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு வழிகோலும். மக்களின் நன்மைக்காக ஆசனங்கள் மற்றும் தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய 'முழுமையான ஆரோக்கியத்திற்கு யோகா' என்னும் செயலியை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவாக்கப்படும்.

9. மனிதகுல வாழ்வாதாரத்துக்கு நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் மழைநீர் சேமிப்பை வலுப்படுத்தும் விதத்தில் ரூ.10 லட்சம் செலவில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் அமைக்கப்படும்.

10. வேலைவாய்ப்பு பிரிவின் மூலம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்று வருகின்றனர். வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில், மென்திறன், தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன், நேர்காணலை எதிர்கொள்ளுதல் மற்றும் நிபுணர்களின் ஊக்கச் சொற்பொழிவின் மூலம் மாணாக்கர்களுக்குப் பயிற்சியளித்து வேலைவாய்ப்புப் பிரிவு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மாணாக்கர்கள் நம்பிக்கையுடன் நேர்முகத் தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற்று சிறந்த வேலைவாய்ப்பினைப் பெறுவர்.

11. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகளை 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் தரம் உயர்த்திட / புதிதாக உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்படும்''.

இத்தகைய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x