

முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விபத்தால் நிலைகுலையாமல், நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாய் அவானி லேஹரா ஓங்கி உயர்ந்துள்ளார் என்று பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனைக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய வீராங்கனை அவானி லேஹரா பங்கேற்றார். 19 வயதான அவானி லேஹரா இறுதிச் சுற்றில் 445.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவானி லேஹராவுக்குக் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் அவரின் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அதன்பின் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்கை வரலாற்றைப் படித்தபின் அவானி, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஜெய்ப்பூரில் 2015-ம் ஆண்டு சேர்ந்தார். இந்த பாராலிம்பிக்ஸில் உலக சாதனையான 249.6 புள்ளிகளைப் பெற்று லேஹரா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்ற அவானி லேஹராவுக்குப் பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவானி லேஹரா பெற்றுள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விபத்தால் நிலைகுலையாமல், நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாய் அவர் ஓங்கி உயர்ந்துள்ளார். அவரது மகத்தான ஊக்கத்தையும் சாதனையையும் நான் போற்றுகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுவரை பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.