

செஞ்சி அருகே மகாதேவி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி விஜயா(30). இவர் நேற்று முன்தினம் ஊரில் ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சுகாதார பணியாளர்கள் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தியுள்ளனர். விஜயாவும் தடுப்பூசி போட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அவருக்குஉடல் நலக்குறைவு ஏற்பட, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முற்பகல் உயிரிழந்தார். தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் அவர் உயிரிழந்தார் எனக் கூறி செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் மகாதேவி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
விஜயாவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால் இறந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருகிறது.