Published : 02 Sep 2021 04:26 PM
Last Updated : 02 Sep 2021 04:26 PM

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா இன்று (செப். 02) வெளியிட்ட அறிவிப்பு:

''வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, 02.09.2021 முதல் 06.09.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

கிருஷ்ணகிரி 13, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 12, புதுக்கோட்டை, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) தலா 8, செய்யாறு (திருவண்ணாமலை) 7, வட்டணம் (ராமநாதபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 6, செங்கம் (திருவண்ணாமலை) 5, அவலூர்பேட்டை (விழுப்புரம்) 4, பொன்னை அணை (வேலூர்), திருப்பத்தூர், கோவிலாங்குளம் (விருதுநகர்), காரைக்குடி (சிவகங்கை) ஓமலூர் (சேலம்) தலா 3, கலவை (ராணிப்பேட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்), உசிலம்பட்டி (மதுரை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அரூர் (தருமபுரி), எமரால்டு (நீலகிரி), திருச்சி விமான நிலையம் தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக் கடல் பகுதிகள்:

04.09.2021, 05.09.2021: கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மனிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

02.09.2021 முதல் 06.09.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு பா.கீதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x