Published : 02 Sep 2021 04:02 PM
Last Updated : 02 Sep 2021 04:02 PM

தமிழகத்திலேயே முதல் முறை: நீலகிரியில் ஆதார், கரோனா தடுப்பூசி சான்று இருந்தால் மட்டுமே மது

நீலகிரி மாவட்டத்தில் ஆதார் அட்டை, கரோனா தடுப்பூசி சான்றைக் காண்பித்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 76 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மது விற்பனையாகிறது. பண்டிகைக் காலம் மற்றும் கோடைக் காலத்தில் மது விற்பனை இரட்டிப்பாவது வழக்கம். குளிர்ப் பிரதேசம் மற்றும் சுற்றுலாத் தலம் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கச் செல்வோர் ஆதார் அட்டை, கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே இந்த நடைமுறை முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையால் மது வாங்க வரும் நபர்கள் கரோனா தடுப்பூசி செலுத்த முற்படுவார்கள் என டாஸ்மாக் மாவட்ட அதிகாரி சேகர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ''மக்களிடம் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்றைக் காண்பித்து மது வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு வரும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி செலுத்துவார்கள்'' என்று தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அடையும் நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 5.82 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 70 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

மது வாங்கத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நடைமுறையால் மதுப் பிரியர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள். இதனால், தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x