Published : 02 Sep 2021 03:40 PM
Last Updated : 02 Sep 2021 03:40 PM

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்: வைகோ

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (செப்.02) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக, ரூ.317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7,469 வீடுகள் கட்டித் தருதல், முகாம்களில் மின் வசதி, குடிநீர், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டப் பணிகள், நிகழும் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. அதேபோல, அவர்களது குடியுரிமை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழு அமைப்பதாகவும் முதல்வர் அறிவித்து இருக்கின்றார்.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக, தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை, பிரிட்டிஷார் அழைத்துக்கொண்டு சென்றனர்.

இருபதாம் நூற்றாண்டில், 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கை விடுதலை பெற்றது. அப்போது, அந்த நாட்டின் மலையகப் பகுதிகளில், தேயிலை, காபித் தோட்டங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்த, இந்திய வழித்தோன்றல் தமிழர்கள் 10 லட்சம் பேருக்கு இலங்கைக் குடியுரிமை கிடையாது; அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என அறிவித்தனர்.

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது, உலகம் முழுமையும் பெரும்பாலான நாடுகளில் உள்ள நடைமுறை ஆகும். ஆனால், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கே வாழ்ந்து, பல தலைமுறைகள் கடந்துவிட்ட தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது என, இலங்கை அரசு அறிவித்தது, மனித உரிமைகளுக்கும், பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரான நடவடிக்கை ஆகும். அதை எதிர்த்து, மலையகத் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

'இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களுக்கு, அந்த நாடுகளில் குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது; அதேபோல, இலங்கையும், குடியுரிமை வழங்க வேண்டும்' என, ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு வலியுறுத்தியது.

1953-54 ஆம் ஆண்டுகளில், இலங்கைப் பிரதமர் சர் ஜான் கொத்தலாவல, நேரு ஆகியோரிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. இந்தப் பிரச்சினை, 15 ஆண்டுகளாக நீடித்தது.

1962 இல், இந்திய - சீன எல்லைப் போர் வெடித்தது. ஏற்கெனவே, கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில், மேற்கு பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நீடித்து வந்தது. அதனால், இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டது. இலங்கையுடன் இணக்கத்தைக் கடைப்பிடிக்கக் கருதி, இந்திய வழித்தோன்றல் தமிழர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இசைந்தனர்.

1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே ஆகியோர், ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்.

அதன்படி, '5,25,000 பேரை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வது; மீதம் உள்ள 3 லட்சம் பேருக்கு, இலங்கைக் குடியுரிமை அளிப்பது' எனத் தீர்மானித்தார்கள். படிப்படியாகத் தமிழர்கள், தமிழகத்துக்கு வரத் தொடங்கினர்; நீலகிரி, கொடைக்கானல் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

10 ஆண்டுகள் கடந்த பிறகு,1974ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே இருவரும், அந்த உடன்படிக்கையைப் புதுப்பித்தனர். தாயகம் திரும்பி வர வேண்டியவர்களுள் 1,50,000 பேரை இரு நாடுகளும் சரிபாதியாகப் பிரித்து, குடியுரிமை வழங்குவது எனத் தீர்மானித்தனர். அதன்படி, இலங்கைக் குடியுரிமை அளித்து விட்டது.

1987 ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே செய்துகொண்ட உடன்படிக்கையிலும், இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்கள் தாயகம் திரும்புவதை விரைவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

தற்போது, தமிழக அரசு மறுவாழ்வுத் துறையிடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, 1984ஆம் ஆண்டு வரை, 4 லட்சத்து 71 ஆயிரம் பேர், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, இந்தியக் குடிமக்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றனர். உடன்படிக்கையின்படி, இந்தியக் குடியுரிமை பெறத் தகுதி உள்ள, 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர்.

1983ஆம் ஆண்டு, இலங்கையில் வெடித்த ஜூலை இனக்கலவரத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனவே, உயிர் தப்புவதற்காக, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத் தமிழர்கள், படகுகளில் இந்தியாவுக்கு வந்தனர்; அவர்களுடன், மலையகத் தமிழர்களும் வந்தனர். அப்போது வந்த அனைவருமே, தமிழகத்தில் 100 முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுள், மலையகத் தமிழர்கள் சுமார் 28,000 பேர். இப்போது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் சேர்த்து, 45,000 பேருக்குக் கூடுதலாக உள்ளனர். இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, இவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் அனைவருமே, அகதிகளாக வந்து குடியேறியவர்களாகக் கருதப்படுவதால், இவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகின்றது.

சட்ட விரோதமாக வந்தவர்கள் என்றால், ரகசியமாக வந்திருக்க வேண்டும். ஆனால், போரின் காரணமாக அடைக்கலம் தேடி வந்தவர்கள்; அரசால் முறையாக வரவேற்று, ஆவணங்களில் பதிவு பெற்று, முகாம்களில் குடியமர்த்தப்பட்டவர்கள். எனவே, இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக, இந்திய, தமிழக அரசுகளின் உதவிகளைப் பெற்று வருகின்றவர்கள்.

இவர்கள் அனைவருக்குமே, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டும். ஈழத் தமிழர்களுள் சுமார் 10,000-க்கும் மேற்பட்டவர்களும், இந்தியக் குடியுரிமை கோருகின்றார்கள். அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.

அவர்களுள் ஒரு பகுதியினர், இலங்கைக்குத் திரும்பிச் செல்லவும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றார்கள். அவர்களுடைய உடைமைகளை, விமானங்களில் கொண்டு செல்ல முடியாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளைச் செய்து தருகின்றது. விமானப் பயணக் கட்டணம், செலவுத் தொகை வழங்குகின்றார்கள்.

அப்படி ஏற்கெனவே அங்கே சென்றவர்களுக்கு, உறுதிமொழி அளித்தபடி, உதவிகள் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்புகள் இல்லை; நிலம் திரும்பக் கிடைக்கவில்லை. தங்குவதற்கு இடமும் இன்றி, உறவினர்களின் வீடுகளில் தங்கி இருக்கின்றனர்.

அதனால், இனி அங்கே போக விழைவோர் தயங்குகின்றனர். அவர்கள் அங்கே செல்ல வேண்டுமானால், அவர்களுக்கான வீடு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும்.

இந்திய இலங்கை உடன்படிக்கைகளின்படி, இந்தியாவுக்குத் திரும்ப வந்து, நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில், தேயிலைத் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு அப்போது அரசுகள் வழங்கிய உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அவர்களது வசிப்பிடங்களில், அடிப்படை வசதிகள் இல்லை. அதுகுறித்தும், தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற ஈழத் தமிழர்களுக்குப் பல நாடுகள் குடியுரிமை வழங்கி இருக்கின்றன.

ஒருவர் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெறலாம்; இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருப்பதால் குடியுரிமை பெறலாம்; இங்கே உள்ளவர்களைத் திருமணம் செய்தவர்கள் குடியுரிமை பெறலாம்; இப்படிப் பல வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், சட்டத்துக்கு எதிராகக் குடியேறியவர்கள் என்று கூறி, அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல என அறிவித்து, அவர்களுடைய விருப்பத்தைக் கேட்டு அறிந்து, குடியுரிமை வழங்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்; மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x