

கடல் அட்டை கடத்தல் வழக்கில் கைதானவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கடல் வளத்தைப் பாதுகாக்கும் கடல் அட்டைகளைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் வில்லாயுதம். இவரைக் கடல் அட்டை கடத்திய வழக்கில் ராமேஸ்வரம் ஜெட்டி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு வில்லாயுதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
''கடல் அட்டை கடத்தல் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், வனத் துறையினர்தான் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் செல்லும் நிலை உள்ளது.
விவசாய நிலத்தை மண் புழுக்கள் பாதுகாப்பதைப் போல, கடல் வளத்தைக் கடல் அட்டைகள் பாதுகாக்கின்றன. எனவே, கடல் அட்டைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது''.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.