தூத்துக்குடி எஸ்.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி எஸ்.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மணல் கடத்தல் வழக்கைக் கண்காணிக்கத் தவறியதாக தூத்துக்குடி எஸ்.பி.க்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மணல் கடத்தல் வழக்கில் சாயர்புரம் போலீஸார் என்னை ஜூலை 22-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

''மனுதாரர் மீது 2019-ல் மணல் கடத்தல் வழக்குப் பதியப்பட்டுள்து. ஆனால், கடந்த ஜூலையில்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இதே மனுதாரர் பட்டா நிலத்தில் இருந்து 1,500 யூனிட் மணல் கடத்திய புகாரை மாவட்டக் குற்றப்பிரிவு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை எஸ்.பி. முறையாகக் கண்காணிக்கத் தவறிவிட்டார்.

எனவே, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மணல் கடத்தல் தொடர்பாக விஏஓ மற்றும் வருவாய்த் துறையினர் உரிய அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in