Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை; ஆதரவற்ற பெண்களுக்கு தனி நலவாரியம்: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் பெண்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் `தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை' உருவாக்கப்படும் என்று சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை மீது உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது:

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 75 லட்சம் முதியோர் உள்ளனர். 2017-18-ல் முதியோர் எண்ணிக்கை 11.2 சதவீதம் இருந்தது. 2030-ல் முதியோர் எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, முதியோரின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் `மாநில மூத்த குடிமக்கள் கொள்கை' உருவாக்கப்படும்.

அதேபோல, பெண்களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்ப்பு, பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும் அரசியலில் வாய்ப்பு பெறவும் உரிமைகளை பெற்றுத் தரவும் அவர்களது ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் `தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை' உருவாக்கப்படும்.

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைந்து, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு வழங்க சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுத்து சிறப்பான வாழ்க்கைக்கு, `கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்' அமைக்கப்படும்.

தாம்பரத்தில் செயல்பட்டு வரும் சேவை இல்லத்தில் உள்ள கட்டிடங்களைப் புதுப்பிக்கவும் பயிற்சிக்கான தளவாடங்களை வாங்கவும் ரூ.1.18 கோடி ஒதுக்கப்படும். புதிதாக 6 மாவட்டங்களில் சமூகநல அலுவலகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞர் நீதிக் குழுமங்கள், குழந்தைகள் நலக் குழுக்கள் புதிதாக ஏற்படுத்தப்படும்.

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்திருக்க வேண்டும் என்ற வயது வரம்பு 40-ஆக உயர்த்தப்படும்.

ஆயிரம் சத்துணவு மையங்களில் ரூ.80 லட்சத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படும். அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு 2 இணை வண்ண சீருடைகள் வழங்கும் திட்டமானது கோவை, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களுக்கு ரூ.4.38 கோடியில் விரிவுபடுத்தப்படும். 7,757 அங்கன்வாடி மையங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தப்படும்.

போதை தடுப்பு மையங்கள்

போதைப் பழக்கத்தில் இருந்து சிறுவர்களை மீட்கும் வகையில் சென்னை, திருநெல்வேலியில் போதை தடுப்பு மையங்கள் ரூ.76 லட்சத்தில் அமைக்கப்படும். சமூகப் பாதுகாப்புத் துறை மண்டல அலுவலகம் மதுரையில் மீண்டும் அமைக்கப்படும். யுனிசெப்புன் இணைந்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி மையம் உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x