

திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்குத் தாலிக்குத் தங்கம் உதவித்தொகை கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் அகியவை மிகவும் நலிந்த நிலையில் உள்ளோரைச் சென்றடையும் வகையில் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, நிதியுதவி, தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போர் வீட்டில் யாரும் அரசு வேலையில் இருக்கக் கூடாது, வேறு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றிருக்கக் கூடாது, நான்கு சக்கர வாகனம் - மாடி வீடு ஆகியவை வைத்திருக்கக் கூடாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணங்களுக்கு நிதியுதவி கோரி விண்ணப்பித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.