

பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு களை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச்சில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்தன. இதில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதி இந்த ஆண்டே தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கும் விதமாக ஜூன்/ஜூலையில் சிறப்பு துணை பொதுத் தேர்வு நடக்கவுள்ளது. இதற்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) ஜூன் 13-ம் தேதி (இன்று) முதல் www.tndge.in இணையதளத்தில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
www.tndge.in இணைய தளத்துக்கு சென்று ‘HIGHER SECONDARY EXAM JUNE / JULY 2014 PRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது மார்ச் 2014 பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய் முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறை வாகப் பெற்று தேர்ச்சி அடையாத வர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வரவேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வரவேண்டும்.
மொழிப் பாடங்களில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.