Published : 01 Sep 2021 02:40 PM
Last Updated : 01 Sep 2021 02:40 PM

மூன்றாம் பாலினத்தவர், தன் பாலின ஈர்ப்பாளர்களைத் துன்புறுத்தும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க விதிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர், தன் பாலின ஈர்ப்பாளர்களைத் துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், விதிகள் கொண்டுவர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயன்றதால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவனக் காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.

இந்நிலையில், இருவரையும் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில், தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தன் பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாகப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிமன்றம், அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப். 01) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மூன்றாம் பாலினத்தவர், தன் பாலின ஈர்ப்பாளர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும், அவர்களைத் துன்புறுத்தக் கூடாது எனவும், காவல் நிலையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்துக் காவலர்களுக்குக் காவலர் பயிற்சி மையம் மூலமாகப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களைளையும் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியைக் கொண்டுவர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஒடுக்கப்பட்டோர் நலனுக்குப் பல சீர்திருத்தங்களைச் செய்து வரக்கூடிய மாநில அரசு, ஒரு முன்னுதாரணமாக இருந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஊடகங்கள் இதுபோன்ற செய்தியைக் கையாளும்போது சுயக் கட்டுப்பாட்டுடனும், வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதி, இந்த விஷயத்தில் ஊடகத்தினர் விழிப்புடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்து, அக்டோபர் 4-ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x