Published : 01 Sep 2021 01:46 PM
Last Updated : 01 Sep 2021 01:46 PM

காரைக்காலில் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை

கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே பேசிய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா.

காரைக்கால் மாவட்டத்தில் இன்று (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்தனர்.

கரோனா பரவல் சூழல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், பெற்றோர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன்படி 9 முதல் 12 -ம் வகுப்பு வரையில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் 18 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 10 மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 21 உயர்நிலைப் பள்ளிகள், 23 மேலநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் அமைந்துள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் வருகை சதவீதம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும், குடிநீர் அருந்தும் போதும், பள்ளியை விட்டு வெளியில் செல்லும்போதும் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று மாணவர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி, பள்ளியின் துணை முதல்வர் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி கூறுகையில், "அரசின் அறிவிப்பு வந்தவுடன் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவர்களின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்கும், வகுப்பறைக்குச் செல்லும் முன் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெஞ்ச்சில் 2 மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சுமார் 75 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் 9, 11-ம் வகுப்புகளுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10, 12-ம் வகுப்புகளுக்கும் காலை 9 முதல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறவுள்ளன. போதிய பாதுகாப்பு அம்சங்களோடு பள்ளிகளை நடத்த மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x