Last Updated : 01 Sep, 2021 11:27 AM

 

Published : 01 Sep 2021 11:27 AM
Last Updated : 01 Sep 2021 11:27 AM

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாலத்தில் ஒளிரும் வண்ண மின்விளக்குகள்: பொதுமக்கள் வரவேற்பு

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாலத்தில் ஒளிரும் வண்ண மின்விளக்குகள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாலத்தில் ஒளிரும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாநகரில் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,289 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியின் கீழ் பாரம்பரியமான தஞ்சாவூர் நகரை மேலும் அழகுபடுத்தும் வகையில், கோட்டை அகழி மேம்பாடு, குளங்கள் மறுசீரமைப்பு, குடிநீர் அபிவிருத்தி, புதை சாக்கடை சீரமைப்புப் பணிகள், காய்கறி சந்தைகள் சீரமைப்பு, மணிக்கூண்டு சீரமைப்பு, பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, நகரங்களின் சாலைகள் புதுப்பித்தல், நகர்ப்புறங்களில் தெருக்கள் மேம்பாடு என 90 திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில், 16 திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் - சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண மின் விளக்குகளால் மிளிரச் செய்ய டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், பாலம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மின்னொளியில் அழகுடன் மிளிரத் தொடங்கியுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக மின்விளக்கு எரியத் தொடங்கியுள்ளது. இந்த மின்விளக்குகள் எரிவதைப் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இதேபோல், தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள பழமையான மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட அய்யன்குளமும், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகமும் டைனமிக் எல்இடி வண்ண மின் விளக்குகளால் ஒளிர விரைவில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரை அழகுபடுத்தும் பணிகளில் ஒன்றாக தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் - சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்குப் பாலத்தின் கீழ்ப்பகுதியில் டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது சோதனை முயற்சியாக மின் விளக்குகள் எரியத் தொடங்கியுள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இதனால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்கப்படும்.

சென்னையில் நேப்பியர் பாலம் உள்ளிட்ட 16 இடங்களில் இதுபோன்று டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், தஞ்சாவூரிலும் மூன்று இடங்களில் ரூ.2 கோடி செலவில் டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x