Published : 01 Sep 2021 10:46 AM
Last Updated : 01 Sep 2021 10:46 AM

ஓபிஎஸ் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

விஜயலட்சுமி | கோப்புப் படம்.

சென்னை

ஓபிஎஸ் மனைவி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு முதல்வர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதலாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

விஜயலட்சுமியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x