Published : 31 Aug 2021 08:58 PM
Last Updated : 31 Aug 2021 08:58 PM

பாராலிம்பிக்ஸில் வெள்ளி: மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து

பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.

2015-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி 63) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்த தமிழகத்தின் தங்கவேலு இந்த முறை வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும்.

இந்நிலையில் பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்துவருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றுள்ள சரத்குமார் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாராலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x