Last Updated : 31 Aug, 2021 07:45 PM

 

Published : 31 Aug 2021 07:45 PM
Last Updated : 31 Aug 2021 07:45 PM

ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த பெண் போலீஸார்: கும்பகோணத்தில் நெகிழ்ச்சி

கும்பகோணம்

ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற பெண் போலீஸார் உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல், இதற்குக் காரணமானவரை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தின் கிழக்குக் கரையில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது நிரம்பிய பெண் ஒருவர் அங்கேயே தங்கியுள்ளார். அவர் யாரிடமும் பேசாமலும், யாசகமும் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு செய்யாமலும் அங்கேயே இருந்துள்ளார். யாராவது அவருக்கு உணவு கொடுத்தால் மட்டுமே வாங்கிச் சாப்பிடுவார். அவர் நைட்டி மட்டுமே அணிந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பொற்றாமரைக் குளத்தின் கிழக்குக் கரைக்கு மேற்கு காவல் நிலையக் காவலர் சுகுணா என்பவர் யதேச்சையாகச் சென்றபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுவரில் சாய்ந்துகொண்டு முனகிக் கொண்டிருந்தார். பிரசவ வலியால் அவர் துடிப்பதை உணர்ந்த சுகுணா, உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது அவருக்கு ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக மேற்கு காவல் நிலையத்துக்கு வந்து அங்கிருந்த சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டும், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டும் உடனடியாக அங்கு சென்று பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்தார்.

அப்போது அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மேற்கு காவல் நிலையப் பெண் காவல் ஆய்வாளர் பேபி, காவல் நிலையத்தில் வைத்திருந்த தன்னுடைய இரண்டு சேலைகளைக் கொண்டுவந்து அந்தப் பெண் மீது போர்த்தி அவரைப் பாதுகாப்பாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பெண்ணைச் சேர்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்தப் பெண்ணிடமிருந்து எந்தவிதத் தகவலையும் பெற முடியவில்லை. இதுகுறித்துக் காவல் ஆய்வாளர் பேபி, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப் பிரியாவுக்குத் தகவல் கொடுத்தார். ஆதரவற்ற பெண்ணுக்குப் பிரசவம் நடந்த இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலையத்தின் பெண் போலீஸார் அனைவரும் அங்கு சென்று அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்து, தாயையும் சேயையும் காப்பாற்றியதைக் கேட்டு எஸ்.பி.ரவளிப் பிரியா பாராட்டினார்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெறக் காரணமாக இருந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இந்தப் பெண் ஒரே இடத்தில் இருந்ததால் யார் இந்த நிலைக்கு ஆளாக்கியது என அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, பாலக்கரையைச் சேர்ந்த ஒருவர் அடிக்கடி வந்து அப்பெண்ணைச் சந்தித்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பாலக்கரைக்குச் சென்று அங்கிருந்த ஜான் (40) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் இந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆதரவற்ற பெண்ணுக்கு மனிதாபிமானத்தோடு பிரசவம் பார்த்ததும், உடனடியாகக் குற்றவாளியைக் கைது செய்த காவல் ஆய்வாளர் பேபி, அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவியாக இருந்த பெண் தலைமைக் காவலர் சரிதா, முதல் நிலைப் பெண் காவலர் சுகுணா ஆகியோரை இன்று தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஸ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்துப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x