பத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில் பிரஸ் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

பத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில் பிரஸ் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
Updated on
1 min read

பத்திரிகையாளர்கள் நலன் பாதிக்காத வகையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பிரஸ் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு விவசாயிகளிடம் தற்போது தேங்காய் பருப்பை கொள்முதல் செய்கிறது. இதனை மாற்றி முழு தேங்காயாக கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் தீர்மானம் இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல், திட்டப்பணிகளுக்கான மதிப்பீடு குறித்த மத்தியஅரசின் வழிகாட்டு முறைகளில் திருத்தம் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளோம். இதனால் மத்திய அரசின் நிதியில் கூடுதல் திட்டங்களை செயல்படுத்த முடியும்.

பிரஸ் கவுன்சில் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகலைப் பெற்று, முதல்வருடன் ஆலோசித்து, பத்திரிகையாளர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைப்பது குறித்தும், முதல்வருடன் ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும்.

மலைக் கிராமங்களில் செல்போன் டவர் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் மத்திய அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, திருப்பூர் எம்பி சுப்பராயன் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in