Published : 31 Aug 2021 03:13 AM
Last Updated : 31 Aug 2021 03:13 AM

நாளை முதல் பள்ளிகள் திறப்பு: ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

செங்கல்பட்டு

நாளை (செப். 1) முதல், பள்ளிகள் திறக்கப்படுவதால் செங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலையொட்டி பள்ளிகள் மூடப்பட்டன. இதனிடையே தொற்று பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப். 1-ம் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

இதையொட்டி பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித் துறை பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 3,157 பேர் உள்ளனர். இதில் 3,013 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 834 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 786 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 464 பேரில் 406 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதே போல் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதில் பலர் கரோனா 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x